சென்னை | ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 3-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை


சென்னை: ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த 3-ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். சென்னை கொருக்குப் பேட்டையை சேர்ந்தவர் தனுஷ் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பிசியோ தெரபி 3-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் அதிக ஈடுபாட்டுடன் விளையாடி பணத்தை இழந்த தனுஷ், நேற்று முன்தினம் மீண்டும் ஆன்லைன் ரம்மி விளையாடி உள்ளார்.

பணம் இல்லாததால், தனது தந்தையிடம் வேறொரு காரணம் கூறி பணம் கேட்டுள்ளார். அவரது தந்தை ரூ.4000 பணம் கொடுத்ததாககூறப்படுகிறது. அந்த பணத்தை வைத்து ஆன்லைன் ரம்மி விளையாடி அதையும் இழந்துள்ளார். மன உளைச்சல் அடைந்த தனுஷ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

வெளியே சென்று வீடு திரும்பிய அவரது பெற்றோர், மகன் தூக்கில் தொங்கியதை கண்டு கதறி அழுதனர். தகவல் அறிந்து வந்த போலீஸார் தனுஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.