பொதுக்கூட்டத்தில் அவதூறு பேச்சு திமுக நிர்வாகி மீது நடிகை ராதிகா போலீஸில் புகார்


சென்னை: திமுக பேச்சாளரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆண்டு நடைபெற்ற திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும், நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு குறித்தும் தகாத வார்த்தைகளில் பேசி இருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதோடு அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கொடுங்கையூர் போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டார். இதையடுத்து ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது செயலுக்கு மன்னிப்பு கேட்டதைத் தொடர்ந்து மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டார்.

இந்நிலையில், காஞ்சிபுரத்தில் ஏப்.15-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சரத்குமார் மற்றும் ராதிகா குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தேர்தலுக்கு முன்பாக, சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்தது குறித்து செய்தியாளர்களிடம், விளக்கம் அளித்திருந்தார். அந்த விளக்கத்தை வைத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியிருந்தார். இதனால், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில்,‘சிறைக்குச் சென்றும் அவர் திருந்தவில்லை.

இவரைப்போன்ற ஆட்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்’ என்று கடுமையாக விமர்சித்திருந்தார் நடிகை ராதிகா. இந்நிலையில், பொதுக்கூட்டத்தில், தன்னையும் தனது கணவரையும் அவதூ றாக பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகை ராதிகா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவை ராதிகாவின் மேலாளர் கே.நடேசன் காவல் ஆணையரிடம் நேற்று வழங்கினார். இந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.