வண்டலூர் அருகே காவலர் பொதுப் பள்ளியை மேம்படுத்த உள்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு


மேலக்கோட்டையூர்: வண்டலூர் அருகே மேலக்கோட்டையூரில் செயல்படும் காவலர் பொதுப் பள்ளியை மேம்படுத்துவது குறித்து உள்துறை செயலாளர் அமுதா மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம், ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழ்நாடு காவலர் உயர்பயிற்சியக வளாகத்தில் தற்காலிகமாக உண்டு உறைவிடப் பள்ளியாக காவலர் பொதுப் பள்ளியை 2018-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.

2018-2019-ம் கல்வியாண்டில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ், இந்த உண்டு உறைவிடப் பள்ளி, காவலர் பொதுப் பள்ளி என்ற பெயரில் ஆங்கில வழி கல்வியில் 5-ம் வகுப்பு வரை தொடங்கப்பட்டது.

காவலர் பொதுப் பள்ளியில் காவலர்களின் குழந்தைகள் மட்டுமின்றி, அப்பகுதியிலுள்ள பொதுமக்களின் குழந்தைகளும் கல்வி பயில்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரூ.51 கோடி மதிப்பில் மேலக்கோட்டையூரில் 8 ஏக்கர் பரப்பளவில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளி கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து பள்ளி முறையாக செயல்படாததால் 50-க்கும் குறைவான மாணவர்களே கல்வி பயின்று வருகின்றனர். மேலும் 2024-25-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை. இந்நிலையில் காவலர் பொதுப் பள்ளி வளாகத்தை, தாம்பரம் மாநகர காவல் ஆணையரக கட்டுப்பாட்டில் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தனியார் பள்ளிக்கு நிகரான வசதி கொண்ட இந்த பள்ளியை மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுந்து வந்தது.

மேலக்கோட்டையூர் காவலர் பொது பள்ளியில், அரசு உள்துறை செயலர் அமுதா
நேற்று ஆய்வு செய்தார். உடன் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்டோர்.
| படங்கள்: எம்.முத்துகணேஷ் |

இந்நிலையில் நேற்று, உள்துறை செயலாளர் அமுதா, பள்ளிக் கல்வி துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன், தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் காவலர் பொது பள்ளி கட்டிடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பள்ளியை சிறப்பாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உண்டு உறைவிட பள்ளி என்று கூறப்பட்டாலும் இங்கு தங்கும் வசதி இல்லாமல் உள்ளது. அதற்காக விடுதி கட்டப்படவுள்ள இடத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்திலும் ஆய்வு நடைபெற்றது. வரும் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் மற்ற பள்ளிகளைப் போல் செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆய்வின்போது ஐஜி மகேஸ்வரி, பள்ளிக்கரணை துணை ஆணையர் கவுதம் கோயல், பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்.குருநாதன் மற்றும் பலர் உடனிருந்தனர்.