கோமா நிலையில் உள்ள கணவரின் ரூ.1 கோடி சொத்துகளை விற்க மனைவிக்கு அனுமதி


சென்னை: உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, கோமா நிலையில் உள்ள கணவர் சிவக்குமாரின் சுமார் ரூ. 1 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கையாளும் வகையில் தன்னை பாதுகாவலராக நியமிக்கக் கோரி, சென்னையைச் சேர்ந்த சசிகலா என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த தனி நீதிபதி, கணவர் கோமா நிலையில் இருக்கும் நிலையில் அவருடைய சொத்துக்களை கையாள, அவரது சம்மதமின்றி மனைவியை பாதுகாவலராக நியமிக்கக் கோரும் மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. அதற்கு சட்டத்திலும் இடமில்லை என்பதால் இதுதொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைநீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

அப்போது நீதிபதிகள், இதுபோன்ற பிரச்னைக்கு சட்டப் பாதுகாவலர் என்ற முறையில்நீதிமன்றம் தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கலாம் என கேரள உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது எனக்கூறி கோமா நிலையில் உள்ள கணவரின் சொத்துகளைக் கையாள மனைவிக்கு அனுமதியளித்து உத்தரவிட்டனர்.

மேலும், ஏற்கெனவே மருத்துவமனை சிகிச்சைக்கு லட்சக்கணக்கான ரூபாய் செலவழித்துள்ள நிலையில், வீடு திரும்பிய கணவரை கவனிக்க தனி செவிலியர்களை நியமிக்க வேண்டியுள்ளது. மேலும் அவர்களது இரு குழந்தைகளும், தந்தையின் சொத்துக்களை விற்க தாயாருக்கு அனுமதி கோரி யுள்ளனர்.

கோமா நிலையில் உள்ள ஒருவரை கவனிப்பது என்பது எளிதானதல்ல. அதற்கு உடனடியாக நிதிதேவைப்படும் நிலையில், உரிமையியல் நீதிமன்றத்தை நாடி நிவாரணம் பெறக்கூறுவது என்பது ஏற்புடையதல்ல. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்கிறோம்.

மனுதாரரை அவருடைய கணவரின் சொத்துகளுக்கு பாதுகாவலராக நியமிக்கிறோம். ரூ.1 கோடிமதிப்பிலான சொத்தை விற்க சசிகலாவுக்கு அனுமதியளிக்கிறோம். அதில், ரூ. 50 லட்சத்தை கணவர் சிவக்குமாரின் பெயரில் நிரந்தர வைப்பீடாக வங்கியில் முதலீடு செய்ய வேண்டும். அதில் இருந்து கிடைக்கும் காலாண்டு வட்டியை குடும்ப தேவைக்காகவும், மருத்துவ சிகிச்சைக்காகவும் அவர் பயன்படுத்தலாம் என உத்தரவிட்டனர்.