சென்னையில் தொடரும் அதிர்ச்சி: 6 வயது சிறுவனை கடித்த வளர்ப்பு நாய்; உரிமையாளர் மீது வழக்கு பதிவு


கோப்புப்படம்

சென்னை: சென்னையில் 6 வயது சிறுவனை‌ வளர்ப்பு நாய் கடித்துக் குதறிய சம்பவத்தில் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 4-வது மாடியில் வசித்து வருபவர் அருண்குமார். இவரது மனைவி தேன்மொழி (31). இவர்களுக்கு 6 வயதில் ஹரிஷ் குமார் என்ற மகன் உள்ளார்.

இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஸ்டெல்லா(55). இவர் தனது வீட்டில் சிப்பிப்பாறை இனத்தைச் சேர்ந்த நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று சிறுவன் ஹரிஷ்குமார் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது ஸ்டெல்லாவின் 10 வயது மகன் வளர்ப்பு நாயை வெளியே அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுவன் ஹரீஷ் குமாரை பார்த்து நாய் குரைத்தது. மேலும், சிறுவனை துரத்திச் சென்று கடித்துக் குதறியது.

இதில் முகம், கை, கால் உட்பட உடலின் பல்வேறு இடங்களில் சிறுவனுக்குக் காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த சிறுவனை மீட்டு அவனது பெற்றோர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்டெல்லாவிடம் விசாரணை செய்து வருகின்றனர். சென்னையில் சில தினங்களாக நாய்க்கடி சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துவருகின்றன. இந்த நிலையில், புளியந்தோப்பு பகுதியில் 6 வயது சிறுவனை நாய் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.