செத்துப் பிழைத்து வந்த பாண்டியம்மாள்- இப்ப என்ன செய்கிறார்?


பாண்டியம்மாள். தமிழகத்தின் ஏதாவது ஒரு நீதிமன்ற வளாகத்தில் இப்போதும் உச்சரிக்கப்படும் பெயர். “அவ பாட்டுக்குப் பாண்டியம்மா மாதிரி திடீர்னு உயிரோட கோர்டுக்கு வந்திடப் போறாய்யா...” என்று போலீஸார் கிசுகிசுப்பார்கள். “அந்தாளு மட்டும் பாண்டியம்மா மாதிரி வந்து, சாட்சி சொன்னா எப்படியிருக்கும்?” என்று கேன்டீனில் வக்கீல்கள் பெருமூச்சுவிடுவதை இன்றைக்கும் கேட்கலாம்!

26 ஆண்டுகளுக்கு முன்பு... ‘பிரேக்கிங் நியூஸ்’ கலாச்சாரம் இல்லாத காலத்திலும்கூட, டீக்கடைகள் முதல் சமையல்கட்டு வரையில் பரபரப்பாகப் பேசப்பட்ட செய்தி ‘பாண்டியம்மாள் கொலை வழக்கு’. அந்தப் பாண்டியம்மாள் இப்போது எப்படியிருக்கிறார்? என்ற ஆர்வம் கிளம்ப, விருதுநகர் மாவட்டம் வாய்ப்பூட்டாம்பட்டிக்குப் போனேன்.

அந்த ஊரைத் தேடி நான் அலைந்ததைத் தனிக்கட்டுரை யாகவே எழுதலாம். சாத்தூர் போய், திரும்ப விருதுநகர் வந்து... ஒரு வழியாக அந்த ஊர் மருளூத்து அருகே இருப்பதைக் கண்டுபிடித்தேன். ஒரு நாளைக்கு மொத்தமே 4 பஸ்தான் அந்த ஊர் வழியாகப் போகுமாம். நல்ல வேளையாக டூவீலரில் வந்த ஒருவர் ‘லிஃப்ட்’ கொடுத்தார்.

40 வீடுகள்கூட இல்லாத குக்கிராமம் அது. அத்தனை பேரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஊருக்குள் போகும் ஒரு சிறுபாலம். பாலத்தின் கட்டைச் சுவரில் உட்கார்ந்து இருவர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

x