3 தமிழக மீனவர்களுக்கு ஜூன் 12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு @ யாழ்ப்பாணம்


ராமேசுவரம்: படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு யாழ்பாணம் கடற்பகுதியில் கரை ஒதுங்கிய தமிழக மீனவர்கள் மூவருக்கு ஜூன் 12-ம் தேதி வரை இரண்டாவது முறையாக காவல் நீட்டித்து மல்லாகம் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கழுமங்குடாவைச் சேர்ந்த முனீஸ்வரன் என்பவருக்குச் சொந்தமான பைபர் நாட்டுப் படகில் வாஞ்சிநாதன், மகேஷ், ரஞ்சித் குமார் ஆகியோர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் சர்வதேசக் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டு, நீரோட்டம் காரணமாக அந்தப் படகு இலங்கை கடல் பகுதிக்குள் சென்றுவிட்டது.

இதையடுத்து கடந்த மே 16-ம் தேதி படகுடன் மூன்று மீனவர்களும் யாழ்ப்பாணம் மாதகல் கடல் பகுதியில் கரை ஒதுங்கினர். அவர்கள் மூவரையும் கைது செய்த இலங்கை போலீஸார், படகையும் பறிமுதல் செய்து அவர்களை யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இன்று 3 மீனவர்களும் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு நீதிபதி இரண்டாவது முறையாக ஜூன் 12-ம் தேதி வரை வரையிலும் காவலை நீட்டித்து உத்தரவிட்டதால், அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.