ஐபிஎல் பிளே ஆஃப் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 172 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் 2024 தொடரின் பிளே ஆப் சுற்றின் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் டூபிளசிஸ் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே நிதானமாக இருவரும் ஆடினார்கள். ஆனாலும், போல்ட் வீசிய பந்தில் 17 ரன்கள் எடுத்திருந்தபோது டூபிளசிஸ் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து அதிரடியாக ஆடி பெங்களூரு அணிக்கு நம்பிக்கையளித்து வந்த விராட் கோலி 33 ரன்கள் எடுத்திருந்தபோது சாஹல் பந்தில் ஆட்டமிழந்தார்.
டூபிளசிஸ், கோலி அவுட்டானதற்குப் பின்னர் களமிறங்கிய கேமரூன் கிரீன் மற்றும் ரஜத் படிதார் இருவரும் ஓரளவு பொறுப்போடு ஆடினார்கள். கிரீன் 27 ரன்கள் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்த பந்திலேயே மேக்ஸ்வெல்லும் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து படிதாரும் 32 ரன்கள் எடுத்திருந்தபோது ஆவேஷ் கான் பந்தில் ஆட்டமிழந்தார். அதற்கு அடுத்ததாக தினேஷ் கார்த்திக் 15 ரன்களிலும், லம்ரோர் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்துள்ளது.
ராஜஸ்தான் அணியின் சார்பில் ஆவேஷ் கான் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், சாஹல், சந்தீப் ஷர்மா மற்றும் போல்ட் தலா ஒரு விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து 173 ரன்கள் என்ற இலக்கோடு ராஜஸ்தான் அணி ஆடி வருகிறது. இந்த போட்டியில் தோற்கும் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...