உலகக்கோப்பை கிரிக்கெட்டில் வாய்ப்பளிக்காதது ஏன்... மனம் திறந்த அஸ்வின்!


ரவிச்சந்திரன் அஸ்வின்

இந்தியாவில் அடுத்த மாதம் அக்டோபர் 5-ம் தேதி துவங்கி ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெற இருக்கிறது. இதில் தனக்கு இடமளிக்காத காரணம் குறித்து பேசியிருக்கிறார் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியை இந்தியத் தேர்வுக்குழு கடந்த வாரங்களில் அறிவித்திருந்தது.

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பில் பெரிய விமர்சனங்களுக்கு உள்ளானது ஆப் ஸ்பின் பவுலர்கள் யாரும் இல்லாதது என்பதுதான். ஒரே அணியில் இடது கை சுழற் பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் இடம் பிடித்திருக்கிறார்கள். இவர்கள் ஒரே அணியில் விளையாடும்போது, பந்துவீச்சில் பெரிய வித்தியாசங்களை வகைகளைத் தர முடியாது.

கிரிக்கெட் வீரர் அஸ்வின்

இப்படியான காரணங்களால் இந்திய அணியின் அனுபவ உலகத் தரம் வாய்ந்த ஆப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு இடம் தர வேண்டும் என்று பலரும் தொடர்ந்து கருத்துகள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் பல கிரிக்கெட் ஆய்வாளர்கள் தற்பொழுது வரை அஸ்வினுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இந்திய உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவதற்கு இருக்கிறது என்று கருதுகிறார்கள்.

தற்பொழுது ஏன் ஆப் ஸ்பின்னர்கள் அணியில் இடம்பெற முடிவதில்லை என்று பேசி உள்ள ரவிச்சந்திரன் அஸ்வின் ”2015ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்திய அணி ஒருநாள் கிரிக்கெட்டில் யாராலும் அசைக்க முடியாத அணியாக இருந்தது. காரணம் பவர் பிளே முடிந்து ஐந்து வீரர்கள் வெளிவட்டத்தில் பீல்டிங் செய்யலாம் என்கின்ற விதி இருந்தது. இதனால் இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் 40, 45 ரன்கள் 10 ஓவர்களுக்கு தந்து, எதிரணியை எப்பொழுதும் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்கள்.

கிரிக்கெட் வீரர் அஸ்வின்

ஆனால் 2015ம் ஆண்டுக்குப் பிறகு, பவர் பிளே முடிந்து வெளிவட்டத்தில் நான்கு பீல்டர்களுக்கு மட்டுமே அனுமதி என்று விதி மாற்றப்பட்டது. இதன் பிறகு 250, 260 என்று இருந்த ரன்கள், 300, 320 என்று மாறியது. ஓவருக்கு நான்கு ரன்களுக்குள் கொடுத்துக் கொண்டிருந்த நான், அடுத்து ஐந்து ரன்கள் தாண்டி சென்றேன்.

இப்படி அடிக்கப்படும் ரன்கள் அதிகமான காரணத்தினால், என்னைப் போலான விரல் சுழற் பந்துவீச்சாளர்கள், பீல்டிங் பேட்டிங்கிலும் பங்களிப்பு கொடுக்க வேண்டும் என்கின்ற நிலை உருவானது. இதன் காரணமாக மெது மெதுவாக எங்களுக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. இதன் காரணமாகத்தான் அதை தொடர்ந்து இந்திய அணியில் எனக்கான வாய்ப்புகள் குறைந்தது!” என்று கூறியிருக்கிறார்.

x