இந்திய பேட்ஸ்மேன்களை அலறவிட்ட இலங்கை வீரர்கள்... 213க்கு ஆல் அவுட்!


இந்தியா இலங்கை போட்டி

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. இதில் இலங்கை அணிக்கு இந்திய 214 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி தொடக்க வீரர்களாக ரோகித் - சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். வேகப்பந்து வீச்சாளர்களை சுலபமாக எதிர் கொண்ட இருவரும் சுழற்பந்து வீச்சில் திணற ஆரம்பித்தனர். சுப்மன் கில் 19 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த விராட் கோலி 3 ரன்னிலும், அரை சதம் விளாசிய ரோகித் சர்மா 53 ரன்னிலும் வெல்லாலகே ஓவரில் ஆட்டமிழந்தனர். 80 ரன்களில் விக்கெட் இழப்பின்றி விளையாடிய இந்திய அணி 91 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இதனையடுத்து இஷான் கிஷன் - கேஎல் ராகுல் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. 44 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த கே.எல். ராகுல் வெல்லாலகே ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். முதல் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய வெல்லாலகே அவர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை கைப்பற்றினார். அடுத்து வந்த ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் ஆட்டமிழக்க, ஜஸ்பிரித் பும்ரா 5 ரன்களையும், குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும், முகமது சிராஜ் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.

47 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்த நிலையில், 197 ரன்களை எடுத்த போது, மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. மழை நின்ற பிறகு சிறிது நேரம் கழித்து போட்டி துவங்கியது. அதன்படி கடைசி ஓவரின் முதல் பந்தில் அக்சர் பட்டேல் அவுட் ஆக போட்டி முடிவில் இந்திய அணி 213 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இலங்கை சார்பில் வெல்லாலகே ஐந்து விக்கெட்களை கைப்பற்றினார். இவர் தவிர சரித் அசலங்கா நான்கு விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். கடைசி ஓவரை வீசிய தீக்ஷனா ஒரு விக்கெட் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து இலங்கை அணி ஆடி வருகிறது.

x