ஆசிய கோப்பை கிரிக்கெட்! இலங்கை ஆதிக்கம்... வங்கதேசம் அணி திணறல்!


இலங்கை - வங்கதேச வீரர்கள்

இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கை மற்றும் பாகிஸ்தான் இணைந்து நடத்துகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் சூப்பர்4 சுற்றை எட்டியுள்ளன. சூப்பர்4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும். சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வங்கதேசத்தை வீழ்த்தி இருந்தது.

இலங்கை அணி

இந்தநிலையில், இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் சூப்பர்4 சுற்றின் 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இலங்கையும், வங்கதேசமும் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய திமுத் கருணாரத்னே 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் பதும் நிசாங்கா சிறப்பாக விளையாடி 40 ரன்கள் எடுத்தார்.

93 ரன்கள் விளாசிய சமாரவிக்ரமா

தொடர்ந்து களமிறங்கிய குசல் மெண்டிஸ் மற்றும் சமாரவிக்ரமா அதிரடியாக விளையாடி அரை சதம் விளாசினர். குசல் மெண்டிஸ் 50 ரன்களும், சமாரவிக்ரமா 93 ரன்களும் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தனர். 50 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 258 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங் செய்து வருகிறது. வங்கதேச அணி சார்பில் தஸ்கின் அகமது மற்றும் ஹசன் மமுத் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஷோரிபுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தற்போது வரை வங்கதேச அணி 20வது ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க வீரர்கள் முகமத் 21 ரன்னிலும், உசேன் 28 ரன்னிலும், சோயிப் அலி உசேன் 3 ரன்னிலும், தாஸ் 15 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

x