ஐசிசி உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்காக 4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக உள்ள நிலையில், நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடங்குவதால் கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்திலும், எதிர்பார்ப்பிலும் உள்ளனர்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி கடந்த 2019ல் இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் இங்கிலாந்து முதன்முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இதன் தொடா்ச்சியாக உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்தது. கடந்த 2 ஆண்டுகளாக பிசிசிஐ, உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தது.
இந்தியாவில் வரும் அக்டோபா் 5ம் தேதி போட்டி தொடங்கி நவம்பா் 19ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கின்றன.
கடந்த முறை இறுதி ஆட்டத்தில் மோதிய இங்கிலாந்து-நியூஸிலாந்து அணிகள் அக். 5ம் தேதி தொடக்க ஆட்டத்தில் மோதுகின்றன. இந்த போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதற்காக சுமார் 4 லட்சம் டிக்கெட்டுகள் தயாராக உள்ளன. ரசிகா்கள், அதிகாரபூாவ இணையத்தில் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.