இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் சஞ்சனா கணேசன் தம்பதிக்கு இன்று காலை அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார் பும்ரா.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. ஹைபிரிட் மாடலில் நடந்து வரும் ஆசியக் கோப்பை தொடருக்காக இந்திய அணி இலங்கையில் உள்ளது.
உலகக்கோப்பை நெருங்குவதால், சீனியர் வீரர்கள் அனைவரும் ஆசியக் கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளனர். குறிப்பாக 10 மாதங்களுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய அவர் 16 ரன்கள் எடுத்தார். இதன்பின் மழை பெய்ததால், ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி இன்று விளையாடவுள்ளது. இதற்கான இந்திய வீரர்கள் தயாராகி வந்த சூழலில், திடீரென நட்சத்திர வீரர் பும்ரா நேற்று அவசர அவசரமாக மும்பைக்கு விமானம் ஏறியுள்ளார்.
இதனால் மீண்டும் பும்ரா காயமடைந்தாரா என்ற பதற்றம் ரசிகர்களிடையே எழுந்தது. இந்நிலையில் பும்ரா மும்பை திரும்புவதற்காக காரணத்தை தனது இஸ்டாகிராமில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
அதில், ’’எங்கள் சிறிய குடும்பம் வளர்ந்துள்ளது. எங்கள் இதயங்கள் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு நிரம்பியுள்ளன! இன்று காலை நாங்கள் எங்கள் மகன் அங்கத் ஜஸ்பிரித் பும்ராவை உலகிற்கு வரவேற்றோம். நாங்கள் நிலவுக்கு மேல் இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையின் இந்த புதிய அத்தியாயம்...’’ என பும்ரா குறிப்பிட்டுள்ளார். இவருக்கு சக வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.