ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.
16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் தொடரின் இன்று நடைபெற்று வரும் 3-வது லீக்கில் இந்தியாவும், பாகிஸ்தானும் கண்டி மாவட்டத்தில் உள்ள பல்லகெலே மைதானத்தில் மோதுகின்றன.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர். தொடக்கத்தில் 4.2 ஓவர்களில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்தது. அப்போது திடீரென மழை குறுக்கிட்டது. பின்னர் மழை நின்றதால் போட்டி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து 4.6வது ஓவரில் ரோகித் சர்மா 22 பந்துகளில் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணியின் வேகபந்துவீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் ரோகித் சர்மா போல்ட் ஆகி ஆட்டமிழந்தார்.
அடுத்து விராட் கோலி களமிறங்கினார். நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷாஹீன் அப்ரிடி பந்துவீச்சில் 4 ரன்களுக்கு விராட் கோலி வெளியேறினார். பின்னர் வந்த ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்களில் ஹரிப் ரவுப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 11.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் எடுத்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மழை நின்றதால் போட்டி மீண்டும் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து கில் ஹாரிப் ரவுப் பந்துவீச்சில் 10 ரன்களில் வெளியேறினார். தற்போது இந்திய அணி 28 ஓவர்கள் முடிவில் 138 ரன்களை எடுத்து 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
இந்த நிலையில் போட்டி நடைபெற்று வரும் பல்லகெலே மைதானத்தில் ரசிகர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. பொதுவாகவே இந்திய - பாகிஸ்தான் போட்டிக்கு மைதானத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும். போட்டி எங்கு நடந்தாலும் ஒரு இருக்கையை கூட ரசிகர் இல்லாமல் பார்க்க முடியாது. ஆனால் இந்த போட்டிக்கு மைதானத்தில் பாதி இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அதிக ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்த்த அதிகாரிகளும் இதனால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.