ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: 5-வது முறையாக இந்தியா சாம்பியன்


சாம்பியன் பட்டம் வென்ற இந்திய ஹாக்கி அணியினர்

ஹுலுன்புயர்: ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சீனாவின் ஹுலுன்புயர் நகரில் நடைபெற்று வந்த இந்தத் தொடரின் இறுதி ஆட்டத்தில் நேற்று இந்தியா - சீனா அணிகள் மோதின. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டம் வென்றது. முதல் மூன்று கால் பகுதியிலும் சீனாவின் டிபன்ஸை தகர்க்க இந்திய அணி வீரர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலன் கிடைக்காமல் போனது.

51-வது நிமிடத்தில் ஜுக்ராஜ் சிங் பீல்டு கோல் அடித்து அசத்தினார். இதுவே வெற்றி கோலாகவும் அமைந்தது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய பட்டம் வெல்வது இது 5-வது முறையாகும். 6 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் பாகிஸ்தான் 5-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது.

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, ஹாக்கி இந்தியா கூட்டமைப்பு பரிசு அறிவித்துள்ளது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் தலா ரூ.3 லட்சமும், பயிற்சியாளர் குழுவில் உள்ளவர்களுக்கு தலா ரூ.1.50 லட்சமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியை சந்திக்காமல் இந்திய அணி வாகை சூடியுள்ளது.

x