5வது முறையாக கோப்பையை வென்றது இந்திய ஹாக்கி அணி: ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் அபாரம்!


புதுடெல்லி: ஆண்களுக்கான ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் சீனாவில் உள்ள ஹுலுன்புயர் நகரில் செப்டம்பர் 8 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

நடப்பு சாம்பியனான இந்திய ஹாக்கி அணி 1-0 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி ஐந்தாவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது. பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹர்மன்பிரீத் சிங் தலைமையிலான அணி இப்போது ஆசிய சாம்பியன்ஸ் டிராபியையும் வென்றுள்ளது. இன்றைய இறுதிப்போட்டியில் இந்தியாவின் டிஃபென்டர் ஜுக்ராஜ் சிங் 51வது நிமிடத்தில் சிறப்பான பீல்டு கோலை அடித்து இந்தியா கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தார்.

இந்தத் தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சீனாவை 3-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டு 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் மூன்றாவது ஆட்டத்தில் மலேசியா அணியை எதிர்கொண்ட இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் மலேசியாவை சாய்த்து அரையிறுதிக்கு முன்னேறியது. அரையிறுதியில் தென்கொரிய அணியை வென்ற இந்தியா இறுதிப்போட்டியில் சீனாவை சந்தித்தது.

நடப்பு தொடரில் இந்திய அணி தோல்வியே சந்திக்காமல் இறுதிப் போட்டி வரை சென்று பட்டத்தை தனதாக்கியுள்ளது. ஆறு அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் பாகிஸ்தான் 5-2 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை வீழ்த்தி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. சீனா இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

x