ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமை தாண்டி விராட் கோலியால் ஒன்றும் செய்ய முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இதுவரையில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் 2 முறையும், இலங்கை 6 முறையும், இந்தியா 7 முறையும் டிராபியை கைப்பற்றியுள்ளன. தற்போது 16வது சீசனுக்கான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. இது பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் நடக்கும் தொடர் என்பதால், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் வெற்றிபெற அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாபர் அசாமை தாண்டி விராட் கோலியால் ஒன்றும் செய்யவே முடியாது என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டாம் மூடி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து டாம் மூடி கூறியிருப்பதாவது, “விராட் கோலியுடன் ஒப்பிடப்படும் அளவிற்கு பாபர் அசாம் வளர்ந்து விட்டார். இலக்கை எட்டுவதில் விராட் கோலியைப் போன்று பாபர் அசாம் திறமை மிக்கவர். என்னதான் இருவருக்கும் இடையில் நிறைய ஒற்றுமை இருந்தாலும், பாபர் அசாமை தாண்டி இந்த ஆசிய கோப்பையில் விராட் கோலியால் ஒன்றும் செய்துவிட முடியாது. இருவரும் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை பார்க்க நான் ஆர்வமாக இருக்கிறேன். ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் கேப்டன்களில் பாபர் அசாம் சிறந்து விளங்கி வருகிறார்” என்று கூறியுள்ளார்.