கோயம்புத்தூரில் இரண்டு நாட்களாக நடைபெற்ற தேசிய அளவிலான ஃபார்முலா கார் மற்றும் பைக் பந்தயத்தில் கலந்து கொண்ட வீரர்கள் சீறிப்பாய்ந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
இந்திய மோட்டார் விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் ஜே.கே டயர் நிறுவனம் சார்பில் தேசிய அளவிலான கார் பந்தயம் கோவை செட்டி பாளையத்தில் நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த போட்டியில் டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, புனே என பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். எல்.ஜி.பி., ஃபார்முலா 4 பிரிவின், 15 லேப்கள் கொண்ட முதல் போட்டியில், டார்க் டான் அணியினர் முன்னிலை வகித்தனர். முடிவில் அந்த அணியின் திஜில்ராவ், ஆர்யா சிங், தில்ஜித் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக நடைபெற்ற போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றன. ப்ரீமியர் எல்.ஜி.பி ஃபார்முலா 4 பிரிவில் ருஹான் ஆல்வா மற்றும் திஜில் ராவ் ஆகியோர் தலா ஒரு பந்தயத்தில் வெற்றி பெற்றனர். மேலும் போட்டியில் கார்கள் சீறிப்பாய்ந்து, அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. முதல் பந்தயத்தில் எம்ஸ்போர்ட்டின் பெங்களூருவை சேர்ந்த ருஹான் அசத்தலாக காரை ஓட்டி கோப்பையைக் கைப்பற்றினார்.
இதே போல 2வது பந்தயத்தில் திஜில் மிகவும் திரிலிங்காக காரை ஓட்டிச் சென்று முதலிடம் பிடித்தார். மேலும், ஜேகே டயர், ராயல் என்பீல்டு, ஜி.டி கோப்பையில் பெங்களூர் சிறுவர்கள் மொத்த இடத்தையும் தட்டிச் சென்றனர். முறையே அபிஷேக் வாசுதேவ், உல்லாஸ் நந்தா, சம்ருல் சுபைர் ஆகியோர் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை பிடித்து கோப்பையைக் கைப்பற்றினர்.
10 மற்றும் 15 சுற்றுகள் என பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் தேசிய அளவில் சிறந்த கார் பந்தய வீரர்களான தில்ஜீத், ருகான், சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஒவ்வொரு சுற்றிலும் 20 பேர் என நடத்தப்பட்ட போட்டிகளில் வீரர்கள் மின்னல் வேகத்தில் வாகனங்களை இயக்கி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். இதே போல் பைக் பந்தயமும் பார்வையாளர்களை கவர்ந்தது. முதல் சுற்று போட்டிகள் கோவையில் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெரும் வீரர், வீராங்கனைகள் மற்ற மாநிலங்களில் நடத்தப்படும் பல்வேறு சுற்று போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.