உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் 3000 மீட்டர் ஸ்டீப்பிள் சேஸ் ஓட்டத்தில் புதிய தேசிய சாதனை படைத்து பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு இந்தியாவின் பாருல் சவுத்ரி தகுதி பெற்றார்.
19-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று வந்தது. கடைசி நாளான நேற்று ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 88.17 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இதனைத் தொடர்நது மகளிருக்கான 3000 மீட்டர் மகளிர் ஸ்டீப்பிள் சேஸ் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பாருல் சவுத்ரி பந்தய தூரத்தை 9.15 நிமிடம் 31 நொடிகளில் கடந்து 11வது இடம் பிடித்தார். அவர் 11வது இடம் பிடித்தாலும் இது புதிய தேசிய சாதனை மட்டுமின்றி, அடுத்த ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக் தொடருக்கு தகுதி பெற தேவையான 9.23 நிமிடத்திற்குள் பந்தய தூரத்தையும் கடந்துள்ளார். இந்த சாம்பியன்ஷிப்பில் ஆடவர் 4*400 தொடர் ஓட்டத்தில் இந்தியா 5ம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.