‘இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரான போராட்டம் தொடரும்’ - வினேஷ் போகத்


பலாலி (ஹரியானா): இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிரான எனது போராட்டம் தொடரும் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்தார்.பாரிஸில் நடைபெற்ற 50 கிலோ மகளிர் பிரிவு மல்யுத்தத்தில் பங்கேற்ற வினேஷ் போகத், இறுதிப் போட்டிக்கு முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட எடை கூடி இருந்ததால் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அவரது பதக்க கனவு பறிபோனது. இந்நிலையில் டெல்லி திரும்பிய அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியிலிருந்து திறந்த ஜீப்பில் அவர் சொந்த ஊரான ஹரியானா மாநிலம் பலாலிக்கு சென்றார். அங்கு கிராம மக்கள் சார்பில் வினேஷ் போகத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அப்போது அவர் பேசியதாவது: இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் (டபிள்யூஎப்ஐ) ஏராளமான தவறுகள் நடந்தன. கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷண் சிங், பாலியல் புகாரில் தண்டனை பெறும் வரை கூட்டமைப்புக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். பலாலி கிராமத்தில் இருந்து ஏராளமான மல்யுத்த வீரர், வீராங்கனைகள் உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

x