எகிப்தில் நடைபெறும் உலக செஸ் கேடட் போட்டியிலிருந்து விலகுவதாக இந்திய செஸ் கூட்டமைப்பு கழகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் மீது ஹமாஸ் நடத்திய ஏவுகணை தாக்குதல்களைத் தொடர்ந்து கடந்த 7 நாட்களாக இஸ்ரேல், காஸா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போரில் இதுவரை இருதரப்பிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதோடு ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வளைகுடா நாடுகள் முழுவதும் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அண்டை நாடான எகிப்தில் நடைபெறும் உலக கேடட் போட்டியில் இருந்து விலகுவதாக, இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
எகிப்தின் ஷார்ம்-எல்-ஷேக் நகரில் அக்டோபர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 23-ம் தேதி வரை இந்த போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நகரம் போர் நடைபெற்று வரும் இஸ்ரேல் மற்றும் காஸா எல்லையில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது. போர் விரிவடையும் பட்சத்தில் வளைகுடா நாடுகளில் விமான பயணம் சிக்கலாகுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இந்த சூழலில் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் வயதைக் கருத்தில் கொண்டும், அவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், இந்த போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த போட்டிக்காக சுமார் ஓர் ஆண்டுக்கு மேலாக பயிற்சி பெற்றிருந்த போதும், வீரர்களின் பாதுகாப்பே முக்கியம் என்பதால் இந்த கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...