முன்னாள் தமிழக கிரிக்கெட் வீரரான கோகுலகிருஷ்ணன் புதன்கிழமை காலமானார். அவருக்கு வயது 50. வேகப்பந்து வீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேனான இவர் 39 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளிலும், இந்தியா ஏ அணிக்காக 45 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.
தமிழ்நாடு, அசாம், கோவா ஆகிய அணிகளுக்காக ரஞ்சி உள்ளிட்ட, உள்ளூர் போட்டிகளில் விளையாடி 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 4 முறை 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். அதேபோல், பேட்டிங்கில் 1,116 ரன்னும், 1 சதமும், 4 அரை சதமும் அடித்துள்ளார்.
ரஞ்சி, டிஎன்பிஎல் மற்றும் விஜய ஹசாரே உள்ளிட்ட போட்டி தொடர்களில் நடுவராகவும் இருந்துள்ளார். கடந்த 2008ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் இரண்டாம் நிலை பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். 2015ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தமிழ்நாடு அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
கோகுலகிருஷ்ணன் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் டபிள்யு,வி.ராமன் தனது இரங்கலை தெரிவித்துள்ளதோடு, அவர் இந்திய அணியில் விளையாடாமல் போனது பெரும் இழப்பு என்றும் கூறியுள்ளார்.