உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்கள்; 3 வீரர்கள் சதம் - புதிய சாதனை படைத்தது தென்னாப்பிரிக்கா!


தென்னாப்பிரிக்கா

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 428 ரன்களை குவித்துள்ளது. இப்போட்டியின் மூலம் ஒரே போட்டியில் மூன்று சதமடித்த அணி மற்றும் உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் குவித்தது என புதிய சாதனைகளை படைத்துள்ளது தென்னாப்பிரிக்கா.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் இன்று நடந்த 4-வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்துள்ளது. டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்காவின் இன்னிங்க்ஸை குயின்டன் டி காக், தெம்பா பவுமா இணை தொடங்கியது. இதில் தில்ஷான் மதுஷங்கா வீசிய இரண்டாவது ஓவரில் தெம்பா பவுமா 8 ரன்களில் விக்கெட்டானார்.

அடுத்து களமிறங்கிய ரஸ்ஸி வான் டெர் டுசென், குயிட்டன் டி காக்குடன் கைகோக்க இருவரும் இலங்கையின் பந்துவீச்சை விளாசித்தள்ளினர். கிட்டதட்ட 30 ஓவர்கள் வரை அடித்து துவம்சம் செய்த இந்த இணையை 31-வது ஓவரில் மதீஷா பத்திரனா பிரித்தார். இதில் 84 பந்துகளில் 100 ரன்களை குவித்த டி காக் அவுட்டாகி வெளியேறினார்.

ஐடன் மார்க்ராம்

110 பந்துகளில் 108 ரன்களை குவித்து அதிரடி காட்டிய ரஸ்ஸி வான் டெரின் விக்கெட்டை துனித் வெல்லலகே கைப்பற்ற 40 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா 291 ரன்களை குவித்தது. ஹென்ரிச் கிளாசென் 32 ரன்களில் அவுட்டானாலும், ஐடன் மார்க்ராம் 3 சிக்சர்களை விளாசி நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவர் விக்கெட்டை தில்ஷான் மதுஷங்கா கைப்பற்ற 106 ரன்களுடன் கிளம்பினார்.

தென்னாப்பிரிக்கா வீரர்கள் இலங்கையை விடுவதாக இல்லை. 49-வது ஓவரில் டேவிட் மில்லர் 3 சிக்சர்களை விளாசி வாணவேடிக்கை காட்ட, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்க அணி 438 ரன்களை குவித்தது. டேவிட் மில்லர் 39 ரன்களுடனும், மார்கோ ஜான்சன் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இலங்கை அணி தரப்பில் தில்ஷான் மதுஷங்கா 2 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரனா, துனித் வெல்லலகே தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

கடந்த 2015-ம் ஆண்டு ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 417 ரன்கள் எடுத்தது உலக கோப்பை போட்டிகளில் அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது. தற்போது அந்த சாதனையை தென்னாப்பிரிக்கா முறியடித்துள்ளது. மேலும் ஐடன் மார்கன் 49 பந்துகளில் சதமடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் குறைந்த பந்துகளில் அதிவேக சதமடித்த சாதனையை படைத்துள்ளார் மார்கன். மேலும் உலகக் கோப்பை ஆட்டத்தில் ஒரு அணியைச் சேர்ந்த 3 வீரர்கள் சதம் அடிப்பது இதுவே முதல் முறையாகும்.

x