ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் கபடி இறுதிப் போட்டியில் ஈரானை போராடி வீழ்த்திய இந்திய அணி தங்கப் பதக்கத்தை வென்றது. பேட்மிண்டன் இரட்டையர் பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்துள்ளது
இன்று நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா - ஈரான் இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால், வெற்றி யாருக்கு என்பதில் கடும் இழுபறி நீடித்தது. 14-13 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்று இருந்தபோது, ஈரானை ஆல்-அவுட் செய்து இந்திய அணி போனஸ் புள்ளிகளை பெற்றது. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 24-22 என முன்னிலை வகித்தபோது, ஆல்-அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. இதனால் இரு அணிகளும் 28-28 என சமநிலை பெற்றன. பின்னர் கடைசி நேரத்தில் போட்டியின் முடிவை நிர்ணயிக்கும் ரெய்டில், இந்தியா - ஈரான் வீரர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கடைசி ரெய்டுக்குச் சென்ற பவன், எதிரணியை சேர்ந்த எந்த ஒரு வீரரையும் தொடாமலேயே கோட்டை தாண்டி வெளியே சென்றுவிட்டார். அதேநேரம், அவரை பிடிப்பதற்காக முயன்ற ஈரான் வீரார்கள் நான்கு பேரும் கோட்டை தாண்டி பெட்டியை விட்டு வெளியே சென்றனர். இப்படி நடந்தால், பழைய விதிகளின்படி இந்திய அணிக்கு நான்கு புள்ளிகளும், ஈரான் அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட வேண்டும். ஆனால், புதிய விதிகளை பின்பற்றிய நடுவர்கள் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளியை வழங்கினார். இதனால் இந்திய அணி வீரர்கள் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதேநேரம், புதிய விதிகளை தான் பின்பற்ற வேண்டும் என ஈரான் வீரர்கள் நடுவர்கள் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் மட்டுமே வழங்கப்பட, இரு அணிகளும் 29-29 என சமநிலை பெற்றது. ஆனாலும், தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இறுதியில் இந்திய அணிக்கு 3 புள்ளிகளும் ஈரான் அணிக்கு ஒரு புள்ளியும் வழங்கப்பட்டது. இதனால் இந்திய கபடி அணி ஈரான் கபடி அணியை விட இரண்டு புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. இறுதியில் இந்திய அணி 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய ஆண்கள் கபடி அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
அதேபோல இன்றைய போட்டியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி, பேட்மிண்டன் இரட்டையர் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ளது. ஆசிய விளையாட்டில் இதுவரை எந்த இந்தியரும் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்றதில்லை என்ற மோசமான சாதனை தகர்க்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...