வினேஷ் போகத் மருத்துவமனையில் எப்படி இருக்கிறார்? - புகைப்படங்களால் அதிர்ச்சி


பாரிஸ்: ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நிர்ணயித்த அளவைவிட உடல் எடை 100 கிராம் கூடியதன் காரணத்தால் பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்த இறுதிப் போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது, ஒலிம்பிக் பதக்கக் கனவுடன் காத்திருந்த ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே வினேஷ் போகத் மயக்கமடைந்தார். இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வினேஷ் போகத்தின் இரண்டு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. அதில், இந்திய மல்யுத்த வீராங்கனை போகத், உடல்நிலை பாதிக்கப்பட்டு சோகமாகவும், மோசமான நிலையில் காணப்படுகிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பாரிஸ் ஒலிம்பிக்கில் வரலாற்று சிறப்புமிக்க தங்கப் பதக்கப் பதக்கத்தைப் பெற வினேஷ் தனது எடையைக் குறைக்க ஒரே இரவில் தொடர்ந்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார். இரவு முழுவதும் அவர் உறங்காமல் ஜாகிங் முதல் ஸ்கிப்பிங் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் வரை அனைத்து பயிற்சியையும் மேற்கொண்டிருந்தார். ஆனால், உடல் எடை 100 கிராம் கூடியுள்ளதாக கூறி அவரை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்து ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. ஒலிம்பிக் கமிட்டிக்கு எதிராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு எதிராகவும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

x