உங்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம்: வினேஷ் போகத்திற்கு பிரதமர் மோடி ஆறுதல்


டெல்லி: சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. நாங்கள் அனைவரும் உங்களுக்காக ஆதரவாக இருக்கிறோம் என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸில் உள்ள பாரிஸில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று நடைபெற்ற மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அடுத்தடுத்து மூன்று போட்டிகளில், முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம், மல்யுத்த போட்டியில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை வினேஷ் போகத் பெற்றார். இதனால் இந்தியா பதக்கம் வெல்லும் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர்.

ஆனால், போட்டி நாளான இன்று, அனுமதிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் கூடுதல் எடை இருப்பதாக கூறி, போட்டியிலிருந்து வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யபப்ட்டுள்ளார். இதன் மூலம், ஒலிம்பிக் பதக்கம் வெல்லும் வாய்ப்பை வினேஷ் போகத் இழந்துள்ளது கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனையடுத்து நீர்ச்சத்து குறைபாடு காரணமாக வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “வினேஷ், நீங்கள் சாம்பியன்களில் ஒரு சாம்பியன். நீங்கள் இந்தியாவின் பெருமை மற்றும் ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். இன்றைய பின்னடைவு வேதனை அளிக்கிறது. நான் அனுபவிக்கும் விரக்தியின் உணர்வை வார்த்தைகள் வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். அதே சமயம், நீங்கள் நெகிழ்ச்சித்தன்மையை வெளிப்படுத்துகிறீர்கள் என்பதை நான் அறிவேன். சவால்களை நேருக்கு நேர் எதிர்கொள்வது உங்கள் இயல்பு. வலுவாக திரும்பி வாருங்கள். நாங்கள் அனைவரும் உங்களுக்காக ஆதரவாக இருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

x