பாகிஸ்தானை பந்தாடியது இலங்கை: 6 வது முறையாக ஆசியக்கோப்பை சாம்பியன் ஆனது!


ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை பந்தாடி இலங்கை அணி சாம்பியன் ஆனது.

ஆசியக் கோப்பையின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், இலங்கையை பேட் செய்ய அழைத்தார். பேட் செய்ய களமிறங்கிய இலங்கை அணியின் வீரர்கள் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்ததால், 8.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்களுடன் அந்த அணி தவித்தது. அப்போது களமிறங்கிய பானுகா ராஜபக்ச அணியை சரிவிலிருந்து மீட்டு அசுரவேகம் காட்டினார். ராஜபக்ச கொடுத்த கேட்சை இரண்டுமுறை கோட்டைவிட்டு பாகிஸ்தான் வீரர்கள் சொதப்பியதால், புது தெம்புடன் அவர் ஆடினார். அவருக்கு பக்கபலமாக ஹசரங்காவும் ஆடி 36 ரன்கள் எடுத்தார். ராஜபக்ச 45 பந்துகளில் 71 ரன்களுடனும், சமிகா 14 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் எடுத்தது.

இதனைத் தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் 5 ரன்னில் வழக்கம்போல அவுட் ஆனார். முகமது ரிஸ்வான் (55 ரன்கள்) , அகமது( 32 ரன்கள்) எடுத்து ஓரளவு புத்துயிர் கொடுத்தனர். அவர்கள் ஆட்டமிழந்த பின்னர் அணியின் நம்பிக்கையும் தகர்ந்து போனது. இதனால் 20 ஓவர்களில் 147 ரன்னுடன் அந்த அணி ஆல்-அவுட் ஆனது. இலங்கை பந்துவீச்சாளர் பிரமோத் மதுஷன் 4 விக்கெட்டும், ஹசரங்கா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இலங்கை அணி வீரர் பானுகா ராஜபக்ச ஆட்டநாயகனாகவும், ஹசரங்கா தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆசியக்கோப்பையில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வெல்வது இது ஆறாவது முறை. இந்திய அணி இதுவரை 7 முறை சாம்பியன் ஆகியுள்ளது.

x