"எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்" என்று கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ- ஜார்ஜினா ரோட்ரிகஸ் தம்பதிக்கு கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற இரு ஆண் குழந்தைகளும், ஈவா, அலனா என்ற பெண் குழந்தைகளும் என மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளன. மேலும், ஜார்ஜினா ரோட்ரிகஸ் மீண்டும் கர்ப்பமானதையடுத்து, இரட்டை குழந்தை பிறக்கப்போவதை உறுதிப்படுத்தியிருந்தார் ரொனால்டோ. இந்நிலையில், பெண் குழந்தை மட்டுமே உயிருடன் பிறந்தது என்றும் ஆண் குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் ரொனால்டோ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ரொனால்டோ தனது ட்விட்டர் பக்கத்தில், "எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம். எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது. எனினும், எங்கள் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தை ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் வழங்கப்பட்ட அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். இந்த கடினமான நேரத்தில் நாங்கள் பேரழிவிற்கு ஆளாகி தனிமையில் இருக்க விரும்புகிறோம். எங்கள் பையன், எங்கள் தேவதை. நாங்கள் எப்பொழுதும் உன்னை நேசிப்போம்" என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.