அகில இந்திய ஹாக்கி போட்டி: சென்னை அணி வெற்றி @ கோவில்பட்டி


கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடந்து வரும் லட்சுமி அம்மாள் கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியின் 6-ம் நாளான இன்று காலை நடந்த ஆட்டத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.

கோவில்பட்டி கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பை 13-வது அகில இந்திய ஹாக்கிப் போட்டிகள் தொடங்கி நடந்து வருகின்றன.

6-ம் நாளான இன்று காலை 7 மணிக்கு நடந்த 21-வது லீக் போட்டியில் சென்னை ஜிஎஸ்டி மற்றும் சென்ட்ரல் எக்ஸைஸ் அணியும், சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணியும் மோதின. இதில் 4 - 1 என்ற கோல் கணக்கில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வெற்றிப் பெற்றது.

6-வது நிமிடத்தில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வீரர் அபரன் சுதேவ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார். 42-வது நிமிடத்தில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வீரர் சூரிய பிரகாஷ் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார். 45-வது நிமிடத்தில் சென்னை அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வீரர் தலெப் ஷா ரஹிம் ஷா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார்.

49-வது நிமிடத்தில் சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வீரர் தலெப் ஷா ரஹிம் ஷா பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார். 54-வது நிமிடத்தில் சென்னை ஜிஎஸ்டி மற்றும் சென்ட்ரல் எக்ஸைஸ் அணி வீரர் அபிஷேக் பீல்டு கோல் முறையில் ஒரு கோல் அடித்தார்.

இந்த ஆட்டத்துக்கு அஸ்வனி குமார் மற்றும் பாலாஜி குமார் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். சிறந்த ஆட்டக்காரர் விருது சென்னை, அக்கவுண்டன்ட் ஜெனரல் ஆபீஸ் ரெக்கிரியேஷன் கிளப் அணி வீரர் சூரிய பிரகாஷ்க்கு வழங்கப்பட்டது.

இன்று மாலை காலிறுதி போட்டிக்கு தகுதி பெறும் அணிகள் அறிவிக்கப்பட உள்ளன. தொடர்ந்து நாளை காலிறுதிப் போட்டிகள் நடக்கின்றன.