பழநி: இந்தியாவில் சூரிய கிரகணம் நிகழ்வு தெரியாது என்பதால், நாளை பழநி முருகன் கோயிலில் வழக்கம்போல் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வானியல் நிகழ்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை கிரகணங்கள். கிரகண காலங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அந்த வகையில், நாளை (மார்ச் 29) சனிக் கிழமை இந்திய நேரப்படி பிற்பகல் 2.20 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி, மாலை 4.17 மணி வரை நிகழ உள்ளது. இந்நிகழ்வு, இந்தியாவில் தெரியாது என்பதால் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சூரிய அனுஷ்டானம் கிடையாது. எனவே, நாளை வழக்கம் போல் ஆறுகால பூஜைகள் நடைபெறும்.
பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வழக்கமாக, சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணத்தின்போது குறிப்பிட்ட நேரத்துக்கு பழநி முருகன் கோயிலில் அனைத்து சந்நிதிகளும் அடைக்கப்படும். பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி கிடையாது. கிரகணம் முடிந்து, பரிகார பூஜைக்கு பிறகே கோயில் நடை திறக்கப்பட்டு, பக்தர்கள் அனுமதிக்க ப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.