சிதம்பரம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் கோயில் தேரோட்டம் கோலாகலம்


சிதம்பரத்தில்  ஶ்ரீசிவகாமிஅம்மன் தேரோட்டம்  நடைபெற்றது.

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் அமைந்துள்ள ஸ்ரீ சிவகாமிஅம்மன் கோயில் ஐப்பசி பூர உற்சவத்தை முன்னிட்டு சிவகாமி அம்மன் தேரோட்டம் நடைபெற்றது.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் சிவகங்கை மேற்குகரையில் அமைந்துள்ள திருக்காமக்கோட்டம் என்ற ஸ்ரீசிவகாமி அம்மன் கோயிலில் ஐப்பசி பூர உற்சவம் அக்.19-ம் தேதி சனிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவகாமி அம்மன் கோயிலில் உள்ள சிவகாமசுந்தரியின் பெயர் திருக்காமக் கோட்டமுடைய பெரியநாச்சியார் என்று கல்வெட்டில் குறிக்க பெற்றுள்ளது.

வெளிச்சுற்றில் சித்தரகுப்தன், நடுக்கம் தீர்த்த விநாயகர், ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரம் ஆகிய சந்நிதிகள் உள்ளன. இச்சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆண்டு தோறும் ஐப்பசி பூர உற்சவம் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மனுக்கு நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து தினமும் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெறறது. இன்று (அக்.27) திருத்தேர் உற்சவம் நடைபெற்றது.

கீழரதவீதி தேரடி நிலையிலிருந்து தேர் புறப்பட்டு தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்கு ரத வீதி வழியாக கீழ ரத வீதியில் உள்ள தேர் நிலையை அடைந்தது. திருநாள பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாலை யாகசாலை பூஜை தொடங்கப்பட்டு, அம்பாளுக்கு லட்சார்ச்சனையும் நடைபெற உள்ளது.

நாளை பட்டு வாங்கும் உற்சவமும் மற்றும் பூரச்சலங்கை உற்சவமும், உற்சவ அம்பாளுக்கும் மகாபிஷேகம் மற்றும் மகாதீபாராதனையும் நடைபெறுகிறது. அக்.29-ம் தேதி இரவு ஸ்ரீசிவானந்த நாயகி சமேத ஸ்ரீ சோமாஸ்கந்தர் திருக்கல்யான உற்சவமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

x