பஞ்சவடி திருப்பதி வெங்கடாஜலபதிக்கு திருப்பாவாடை உற்சவம்: புதுவையில் திரளான பக்தர்கள் தரிசனம்


புதுச்சேரி: பஞ்சவடியில் திருப்பதி வெங்கடாஜலபதிக்கு திருப்பாவாடை உற்சவம் இன்று நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பஞ்சவடி கோயிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவதரித்த மதுராவில் தொடர் மழையின் காரணத்தினால் கோவர்த்தன மலையினை கிருஷ்ண பகவான் தூக்கி ஆயர்பாடியில் உள்ள பக்தர்கள் அனைவருக்கும் அன்னப் பிரசாதம் வழங்கினார். அதை நினைவூட்டும் விதமாக திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினரால் வழங்கப்பட்டு பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வாரி வெங்கடாஜலபதி சுவாமிக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தின் மூன்றாவது வியாழக்கிழமை அன்று திருப்பாவாடை உற்சவம் நடைபெறும்.

அதேபோல் இன்று விஷேச பிரசாதங்கள், பட்சணங்கள் மற்றும் பழங்களால் அலங்கரிக்கப்பட்ட திருப்பாவாடை சேவை வேத பண்டிதர்களால் ஸ்ரீ நிவாஸ ‘கத்ய’த்துடன் வேத கோஷங்கள் முழங்க நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஸ்ரீ ஜெய மாருதி சேவா ட்ரஸ்ட் தலைவர் அறங்காவலர் கோதண்டராமன் செய்திருந்தார்.

காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை திருப்பாவாடை அலங்காரம் நடைபெற்றது. காலை 9.00 மணி முதல் சர்வ தரிசனம் தொடங்கியது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் வெங்கடாஜலபதியை தரிசனம் செய்து வருகின்றனர்.

x