இன்று ஸ்ரீரங்கத்தில் தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்தனர்!


ஸ்ரீரங்கம் தேரோட்டம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் இன்று காலை தொடங்கி வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 28-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வருகிற 8-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. தேர் திருவிழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நேற்று முன்தினம் மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச் சிவிகையில் புறப்பட்டு நெல்லளவு கண்டருளினார். அதன் பின் ஆழ்வார் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளி அதிகாலை 1 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

அதைத்தொடர்ந்து திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையில் இருந்து தோளுக்கினியானில் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் அதிகாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார்.

சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. தேர் திருவிழாவை முன்னிட்டு ஆண்டாள் கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட பட்டு வஸ்திரம், கிளி மாலை உள்ளிட்டவை பெருமாளுக்கும் தாயாருக்கும் அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, ரங்கா என்ற முழக்கங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

நாளை 7-ம்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 8-ம் தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரியப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன் மற்றும் ஊழியர்கள் செய்துள்ளனர்.

x