சொர்க்கவாசல் திறப்பில் அதிர்ச்சி... தலைகீழாக கவிழ்ந்த பெருமாள்!


பென்னாகரம் அருகே சொர்க்கவாசல் திறப்பின்போது பக்தர்களால் சுமந்து செல்லப்பட்ட பெருமாள் விக்ரகம் தலைகீழாக கவிழ்ந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஆலேபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம்.

இந்நிலையில் இன்று பெருமாள் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்தில் காத்திருந்தனர்.

அப்போது சுவாமி சிலை சொர்க்கவாசல் வழியாக வெளியே வந்து ஊர்வலத்திற்கு புறப்பட்டது. ஆனால் முறையாக வாகனத்தில் சுவாமி சிலையை கட்டவில்லை, இதன் காரணமாக, பாதி தூரத்திலேயே, சுவாமி சிலை தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் பக்தர்கள் பெரும் வேதனை அடைந்தனர். சிலை கீழே விழுந்ததால் சிலை மீது இருந்த அலங்காரங்கள் அனைத்தும் கலைந்தது.

பின்பு மீண்டும் முறைப்படி சாமி சிலைக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்ட பின்பு சுவாமி சிலை உரிய முறையில் ஊர்வலம் சென்றது. அதன் பின்பு கோயிலில் அதற்குரிய நிலையில் வைக்கப்பட்டது.

சொர்க்கவாசல் திறப்பின் போது பெருமாளை சேவிக்கவந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்பு, பெருமாள் சிலை தலைகீழாக கவிழ்ந்ததால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என பக்தர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

x