திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி | நாளை முதல் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம்!


திருப்பதியில் நாளை முதல் வைகுண்ட ஏகாதசி இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்படுகின்றன. சுமார் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் தீரும் வரை விநியோகிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் டிசம்பர் 23-ம் தேதி வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 23-ம் தேதி முதல் 2024 ஜனவரி 1-ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்க வாசல் திறந்திருக்கும்.

வைகுண்ட ஏகாதசி நாட்களில் 300 ரூபாய் சிறப்பு தரிசனம், வாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்று தீர்ந்துள்ளன. இந்நிலையில், நாளை டிசம்பர் 22-ம் தேதி முதல் டோக்கன்கள் தீரும் வரை 90 விநியோக மையங்களில் இலவச தரிசன டோக்கன்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

திருப்பதி ரயில் நிலையம் எதிரே விஷ்ணு நிவாசம், பஸ் நிலையம் எதிரே மாதவம், திருப்பதி ரயில் நிலையத்தின் பின்புறம் கோவிந்தராஜ சத்திரம், அலிபிரி கருடன் நிலை அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், மஹதி அரங்கம் அருகே உள்ள ராமசந்திரா புஷ்கரணி, மார்க்கெட் அருகே உள்ள இந்திரா மைதானம், ஜீவகோனா உயர் நிலைப்பள்ளி, ராமாநாயுடு உயர்நிலைப்பள்ளி, ஜில்லா பரிஷத் உயர்நிலை பள்ளி, எம்.ஆர் பல்லி ஆகிய 9 இடங்களில் 90 விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் சுமார் 4 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...


ஜனவரி 3ம் தேதி சென்னையில் புத்தக கண்காட்சி... முதல்வர் துவங்கி வைக்கிறார்!

x