பனை விதைகளில் ‘விநாயகர்’ சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் மதுரை இளைஞர்!


பனை விதை விநாயகர்

சுற்றுச்சூழலை பாதுகாக்க விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்காக பனை மர விதைகளில் விநாயகர் சிலைகளைத் தயாரித்து, மக்களுக்கு இலவசமாக மதுரை இளைஞர் ஒருவர் வழங்கி வருகிறார்.

அசோக்குமார்

இந்தியா முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தற்போது நாடு முழுவதுமே வீடுகள், தொழில் நிறுவனங்கள், கோவில்களில் மட்டுமில்லாது விநாயகர் சதுர்த்தி விழா பொதுவெளிகளில் கொண்டாடப்படும் விழாவாக மாறியுள்ளது. இந்த விழாவுக்காக பொதுவாக சிறிய விநாயகர் சிலைகள் முதல் பல அடி உயரம் 10 அடி உயரம் வரையிலான சிலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இந்த சிலைகள் களிமண், ரசாயன மாவுகளை கொண்டு தயாரித்து பொதுமக்களை கவர சுற்றுச்சூழலுக்கு ஒவ்வாத வர்ணங்களை பூசி விற்பனை செய்கின்றனர். இந்த சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழலும், நீர்நிலைகளும் மாசு அடைகின்றன.

அதனால், தற்போது விநாயகர் சிலைகள் தயாரிப்பு முதல் அதனை நீர்நிலைகளை கரைப்பது வரை பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. தற்போது ஒரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு களிமண், காகித கூழ், கிழங்கு மாவு போன்றவற்றை மட்டுமே வைத்து விநாயகர் சிலைகளை தயாரித்து விற்பனை செய்கின்றனர். விநாயகர் சதுர்த்தி நெருங்கி வருவதனை முன்னிட்டு சிலை தயாரிப்பாளர்கள் இந்து அமைப்பினர், பொதுமக்கள் விரும்பும் வகையில் பல்வேறு வகை சிலைகளை தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையிலும் பனைமரம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தும் விதமாகவும் மதுரையை சேர்ந்த இயற்கை ஆர்வலர் ஜி.அசோக்குமார் என்பவர், பனைவிதையில் விநாயகர் சிலைகளை தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘2018ம் ஆண்டு முதலே பனை மரவிதைகளில் இருந்து பொம்மை தயாரித்து வருகிறேன். ஆரம்ப காலத்தில் இந்த வகை திருஷ்டி தாத்தா பொம்மைகளை தான் கட்டிடங்கள், வீடுகளில் தொடங்க விட்டனர். காலப்போக்கில் பிளாஸ்டிக் மோகத்தில் இந்த வகை பொம்மைகளை இழந்து விட்டோம். நம்முடைய பாரம்பரிய பொம்மைகளை மீட்டெடுக்கவே நான், பனை மரவிதை பொம்மைகளை தயாரிக்கும் பயிற்சிகளை சிறுவர்களுக்கு இலவசமாக கற்றுக் கொடுத்து வருகிறேன்.

தற்போது விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொதுமக்களை கவருவதற்காக பல வண்ணங்களில் ரசாயனத்தை பயன்படுத்தி விற்பனை செய்கின்றனர். இந்த வகை சிலைகள், சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது. அதனால், நான் மக்களின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் சிறு முயற்சியாக இந்த ஆண்டு விநாயர் சதுர்த்திக்காக பனைவிதையில் விநாயகர் செய்யும் முயற்சியினை துவங்கியுள்ளேன்.

இந்த வகை விநாயகர் சிலைகள் இயற்கைக்கு உகந்தது. முடிந்தவரை விநாயகர் சதுர்த்திக்குள் இயன்ற பனைவிதை விநாயகர் தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளேன். இந்த பனைவிதை விநாயகரை வணங்கி நீர்நிலைகளில் போடும்போது பனைமரமாக வளர்ந்து வரவும் வாய்ப்பு உள்ளது. பனைமரத்தையும் இயற்கையையும், சுற்றுச்சூழலையும் காத்திட ஓர் நல்வாய்ப்பாக அமையும்’’ என்றார்.

படங்கள்; எஸ்.கிருஷ்ணமூர்த்தி. நா.தங்கரத்தினம்.

x