நாகை மாவட்டம் நாகூர் ஆண்டவர் தர்காவின் 467-ம் ஆண்டு கந்தூரிவிழா வரும் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, தர்காவின் 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
நாகப்பட்டினம் அருகே உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவின் 467-ம் ஆண்டு கந்தூரி விழா டிச.14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று காலை நாகூர் ஆண்டவர் தர்காவில், பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ஆண்டவர் தர்காவில் சிறப்பு துவா ஒதப்பட்டது.
அப்போது பாய் மரத்தில் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற பிரார்த்தனை செய்து ஏராளமானோர் பாய்மர முடிச்சு போட்டனர்.
"வெளிநாடு செல்ல வேண்டும், குழந்தைகள் படிக்க வேண்டும், வீடு கட்ட வேண்டும், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை மனதில் வைத்து இந்த பாய்மர முடிச்சு போடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மங்கள வாத்தியங்கள், அதிர்வேட்டுக்கள் முழங்க 5 மினாராக்களிலும் பாய்மரங்கள் ஏற்றப்பட்டன. அப்போது, கூடியிருந்த ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அனைவருக்கும் சர்க்கரை மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
நாகூர் ஆண்டவர் தர்காவின் முக்கிய நிகழ்ச்சியான கொடியேற்று வைபவம் டிச.14-ம் தேதி நடைபெறுகிறது. ஜனவரி 23-ம் தேதி நாகையில் இருந்து சந்தன கூடு ஊர்வலம் தொடங்கி 24-ம் தேதி அதிகாலை 4:30 மணி அளவில் தர்கா வந்தடைந்து, நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற உள்ளது.
இதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நாகூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட மற்றும் தர்கா நிர்வாகங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.