தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று இந்து அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே குச்சனூரில் சனிஸ்வர பகவான் கோயில் உள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வருகை தந்து வழிபடுவார்கள். இந்த கோயில் பரம்பரை டிரஸ்ட் பராமரிப்பில் இருந்து வந்தது.
கடந்த 2003ல் இந்த கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கையில் எடுத்துக் கொண்டது. அறநிலையத் துறை சார்பில் கோயிலை நிர்வாகம் செய்ய செயல் அலுவலர் நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து பரம்பரை டிரஸ்ட் நிர்வாகிகள் திருமலைமுத்து, தீபன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வெளியானது. நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பு வெளியான 4 வாரங்களுக்குள், கோயில் நிர்வாகத்தை பரம்பரை டிரஸ்டிகளிடம் ஒப்படைக்க வேண்டும். ஒருவர் மட்டுமே வழக்கு தொடர்ந்திருந்தாலும், நிர்வாகத்தை டிரஸ்டிகள் ஏழு பேரிடமும் ஒப்படைக்க உத்தரவிடப்படுகிறது என்று அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.
கோயில் நிர்வாகங்களில் இருந்து அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாகி இருக்கும் நிலையில் கோயிலை மீண்டும் கோயில் டிரஸ்ட் நிர்வாகத்திடமே ஒப்படைக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அறநிலையத்துறை மேல்முறையீடு செய்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
எல்லை தாண்டிய காதல்; பாகிஸ்தான் காதலியின் கரம் பிடித்து அழைத்து வந்த இந்திய காதலன்!