புரட்டாசி முதல் சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு


பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு

அரியலூர்: புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் இன்று நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர் அருகேயுள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை சுப்ரபாத சேவை, விஷ்வரூப தரிசனம் ஆகியவற்றுக்கு பின் பெருமாள், தாயார் ஸ்ரீதேவி, பூதேவி உற்சவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து பெருமாள், தாயாருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

துளசி அர்ச்சனை, அலங்கார தீப வழிபாடு, மந்திர உபசார பூஜைகள் நடைபெற்றன. இதில், அரியலூர் மாவட்டம் மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல் அரியலூர் கோதண்டராமசாமி கோயில், ஜெயங்காண்டம், திருமானூர், திருமழபாடி, தா. பழூர், ஆண்டிமடம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு, பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

x