உலகப் புகழ் பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆவணித்திருவிழா இன்று செப்டம்பர் 4ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆவணித் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை ஒரு மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 01-30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் , 2.00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 5.30 மணிக்குள் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தினந்தோறும் சுவாமியும் அம்பாளும், ஒவ்வொரு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான சிவப்பு சாத்தி பத்தாம் தேதியும், பச்சை சாத்தி பதினொன்றாம் தேதியும் நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13ம் தேதி நடைபெறுகிறது.
இந்த திருவிழாவில் கலந்து கொள்ள நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை திருச்செந்தூர் ஆலய நிர்வாகம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.