சபரிமலை அரவணை பாயாசத்தில் இந்த பொருட்கள் சேர்க்கப்படாது - தேவசம்போர்டு அறிவிப்பு!


அரவணை பாயாசம்

சபரிமலை சுவாமி ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சபரிமலை தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

கார்த்திகை மாத சீசன் தொடங்கியுள்ள நிலையில் சபரிமலை சுவாமி ஐயப்பனுக்கு மாலையிட்டு இருமுடி கட்டி ஏராளமான பக்தர்கள் யாத்திரை புறப்பட்டுள்ளனர். சபரிமலை தரிசனம் வரும் பக்தர்களுக்கு சபரிமலை தேவசம்போர்டு அரவணை பாயாசத்தை பிரசாதமாக வழங்கி வருகிறது. அரிசி, சர்க்கரை, பழம், நெய், ஏலக்காய் ஆகியவை சேர்க்கப்பட்டு இந்த அரவணை தயார் செய்யப்பட்டு வந்தது.

சபரிமலை ஐயப்பன் கோயில்

இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஏலக்காய் சாகுபடியில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் காரணமாக பக்தர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்படலாம் என கேரள உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டி எச்சரித்தது. அதை தொடர்ந்து அரவணையில் ஏலக்காய் பயன்படுத்துவது நிறுத்தப்பட்டது. எனினும் ஏலக்காய் சேர்க்கப்படாததால் அரவணையின் தரம் குறித்த எந்த புகார்களும் வரவில்லை என்றும், இதனால் இனி அரவணையில் ஏலக்காய் சேர்ப்பது முழுவதுமாக தவிர்க்கப்படுவதுமாக தேவசம்போர்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சீரகத்திலும் கிருமிநாசினி உள்ளதாக சிலர் புகார் தெரிவித்து வருவதாகவும், அதுகுறித்த ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர், தேவை ஏற்பட்டால் சீரக பயன்பாடும் அரவணை தயாரிப்பில் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரவணை பாயாசம்

இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்ட் தலைவர் பி.எஸ். பிரசாந்த் செய்தியாளர்களை சந்தித்த போது, “சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரவணை பாயாசத்தில் இனி ஏலக்காய் சேர்க்கப்படாது. அந்த பாணியில் கடந்த ஓராண்டாக தயாரிக்கப்பட்ட அரவணை பாயாசம் குறித்து எந்த புகாரும் வரவில்லை. இதன் காரணமாக அரவணை பாயசத்தில் இனி ஏலக்காய் சேகரிக்கப்படாது. அத்துடன் சீரகத்திலும், கிருமிநாசினி உள்ளதாக சிலர் புகார் தெரிவித்து வருகின்றனர். அதுகுறித்து ஆய்வு அறிக்கை கிடைத்த பின்னர் தேவைப்பட்டால் சீரகமும் அரவணை பாயசத்தில் சேர்க்கப்படுவது தவிர்க்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x