அதிர்ச்சி... பழநி கோயில் கருவறை... கடும் நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு!


பழநி தண்டாயுதபாணி

பழநி கோயில் கருவறைப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது தொடர்பாக அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பழநி தண்டாயுதபாணி கோயில்

பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கருவறை தொடர்பான புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கினை விசாரித்த நீதிபதிகள், பழநி கோயிலுக்குள் செல்போன்கள் கொண்டுச் செல்ல அனுமதித்தது யார்? கோயில் கருவறையினை செல்போனில் படம் எடுக்க காரணமானவர்கள் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அறநிலையத்துறை அதிகாரி, கோயிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து, திருப்பதி கோயிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்வதை தடுப்பது போல் இங்கு ஏன் தடுக்க முடியவில்லை எனவும், கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்பவர்களை மலையில் இருந்து கீழே இறக்கி விடும்படி உத்தரவிட்டனர்.

மேலும் கருவறையை புகைப்படம் பிடித்ததை தடுக்காமல் இருந்த கோயில் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கினை செப்டம்பர் முதல் தேதிக்கு உத்தரவிட்டனர்.

x