மறந்துடாதீங்க... கார்த்திகை ஞாயிறு... இப்படி தீபமேற்றி வழிபட்டால் ஐஸ்வர்யம் பெருகும்!


கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில், வீட்டு வாசலில் மாலையில் விளக்கேற்றி வைத்தால், நம் இல்லத்தில் ஐஸ்வர்யம் பெருகும். தரித்திரம் விலகும் என்பது ஐதீகம். இன்று கார்த்திகை ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் விளக்கேற்றி கார்த்திகேயனை வழிபட மறந்துடாதீங்க.

கார்த்திகை மாதம் என்பது வழிபாட்டுக்கு உரிய அற்புதமான மாதம். கொஞ்சம் மழையும் கொஞ்சம் குளிரும் கலந்திருக்கக் கூடிய இந்த மாதத்தில் நம் மனம் ஒருபுள்ளியில் அழகுற இயங்கும் என்றும் முழு ஈடுபாட்டுடன் எந்தவொரு செயலையும் நம்மால் செய்யும் சக்தி கிடைக்கும்.

கார்த்திகை மாதம் தீபங்களின் மாதம். திருமண மாதம் என்றும் சொல்லுவார்கள். திருக்கார்த்திகை தீபத்திருவிழா நடைபெறும் மாதம். கிராமங்களில், கார்த்திகை மாதம் வந்துவிட்டாலே, தினமும் வீட்டு நிலைவாசற்படியில் விளக்கேற்றி வைத்திருப்பார்கள். இன்றைக்கும் இதை வழக்கமாகக் கொண்டிருக்கிற கிராமங்கள் இருக்கின்றன.

சென்னை முதலான பெருநகரங்கள், அபார்ட்மென்ட் குடியிருப்புகளாக மாறிய போது, கிராமத்தில் இருந்து வந்தவர்கள், இதைக் கடைப்பிடித்தார்கள். பிறகு கொஞ்சம்கொஞ்சமாக மாறிவிட்டன. கார்த்திகை மாதத்தில், தினமும் நிலைவாசற்படியில் விளக்கேற்றி வைப்பது விசேஷமானது.

மாதம் முழுவதும் விளக்கேற்றி வழிபட முடியாவிட்டாலும், கார்த்திகை மாதத்தின் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமாவது, மறக்காமல் இரண்டு அகல்விளக்குகளை ஏற்றிவைத்து பூஜையறையில் நாம் அமர்த்தியிருக்கும் தெய்வங்களை வழிபடுவது பல நன்மைகளைத் தந்தருளும்.

ஞாயிற்றுக்கிழமை சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நன்னாள். மாலை நேரத்தில் சந்திரனின் ஆதிக்கம் வந்துவிடும். மறுநாள் திங்கட்கிழமையும் சந்திரனின் ஆதிக்கம் நிறைந்திருக்கும். திங்கள் என்றால் சந்திரன் என்று அர்த்தம். ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரனின் ஆதிக்கம் தொடங்குகிற வேளையில், வீட்டு வாசலில் விளக்கேற்றி வைத்து, வழிபட்டு வந்தால் நன்மைகள் அனைத்தும் கிடைக்கப் பெறலாம். இல்லத்தில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும்.

x