ஐந்து அடுக்கு பாதுகாப்பால் பரபரப்பு... திருவண்ணாமலை தீபத் திருவிழாவிற்கு 14,000 போலீஸார் குவிப்பு


காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, நவம்பர் 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

நாள்தோறும் காலை மற்றும் இரவு வேளைகளில் பஞ்சமூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாட வீதியில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் 10-ம் நாளான நாளை (நவ.26) அதிகாலை பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்த தீபதரிசனத்தைக் காண வெளி மாவட்டம், மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தீபத் திருவிழா ஏற்பாடு குறித்து அண்ணாமலையார் கோயிலில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.

இதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”இந்த ஆண்டு தீபத் திருவிழாவிற்காக 5 அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை இயக்குநர் தலைமையில் 14,000 காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

கோயில் வளாகம் மற்றும் கிரிவலப் பாதையில் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தீவிரமாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. 14 கிலோமீட்டர் கிரிவலப் பாதையில் தங்களுக்கு உதவலாமா (May I Help You) என்ற 50 மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கூட்டத்தில் காணாமல் போகும் குழந்தைகளைக் கண்டறியும் வகையில், 30 ஆயிரம் ரிஸ்ட் பேண்டுகளை, கிரிவலம் வரும் குழந்தைகளின் கையில், அவர்களின் பெற்றோரின் பெயரை எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

விழாக்கோலம் பூண்ட திருவண்ணாமலை

இந்த இணையதளத்தைப் பயன்படுத்தி வெளி மாநிலத்திலிருந்து வரும் கார்கள், எந்த இடத்தில் கார் பார்க்கிங் செய்யும் வசதி உள்ளது எனக் கண்டறிந்து, அந்த இடத்தில் பார்க்கிங் செய்யும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

புறவழிச்சாலையில் இருந்து கோயில் வளாகம் வரை 100 சிறப்பு பேருந்துகள் பக்தர்கள் வந்து செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குறிப்பாக, தீபத் திருவிழாவின்போது முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், 2,500 நபர்கள் மட்டுமே மலை மீது ஏற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவக் குழுக்கள் அமைத்து, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்படும். மலை மீது ஏறும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள், அபாயகரமானப் பொருட்கள் எடுத்துச் செல்லாத வகையில் தீவிரமாக சோதனை செய்த பிறகு, மலை மீது ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், குற்றச் சம்பவங்களைத் தடுப்பதற்காக 14 கிலோ மீட்டர் கிரிவலப் பாதையில், ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு இடத்தில் எல்இடி திரை அமைத்து விழிப்புணர்வு படங்கள் திரையிடவுள்ளது.

திருவண்ணாமலை

குற்றப் பின்னணி உள்ள நபர்களைக் கண்காணிப்பதற்காக 60 சிறப்பு போலீஸ் குழுவை நியமித்துள்ளனர். 35 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வர எதிர்பார்க்கப்படுவதால், செல்போன் சிக்னல் கிடைப்பதற்காக ஆறு இடங்களில் தற்காலிக செல்போன் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்ட எல்லையில் முதல் அடுக்கு, மாவட்ட புறவழிச் சாலையில் இரண்டாம் அடுக்கு, ரயில் நிலையம் மாடவீதியில் மூன்றாம் அடுக்கு, ஒத்தவாடை வீதி சுற்றி நான்காம் அடுக்கு, கோயிலுக்குள் ஐந்தாம் அடுக்கு என 5 அடுக்கு பாதுகாப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி, மலை மீது 200 போலீஸார் மற்றும் தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பரணி தீபம் ஏற்றும்போது 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பக்தர்கள் மற்றும் மகா தீபத்திற்கு 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும், குற்றச் சம்பவங்களைத் தடுக்க குற்றவாளிகளைக் கண்டறியும் வகையில், ஃபேஸ் ட்ராக்கர் என்ற செயலி பயன்படுத்தப்பட்டுள்ளது.வெளி மாநிலத்தில் இருந்து வரும் பக்தர்களின் வசதிக்காக துண்டுப் பிரசுரம் ஏற்பாடுகள் செய்து அதில் வரைபடம், பேருந்து நிறுத்தம், கார் பார்க்கிங் வசதிகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட உள்ளது.

திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை சிறப்பான முறையில் நடத்த தமிழ்நாடு காவல்துறையும், மாவட்ட காவல் துறையும் தயார் நிலையில் உள்ளது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தேஜஸ் போர் விமானத்தில் பறந்த பிரதமர் மோடி!

எப்போதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்... குஷ்பு பேட்டி!

x