திருவண்ணாமலையில் நாளை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், அண்ணாமலை உச்சிக்கு மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் கொப்பரை கொண்டு செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் நாளை ஏற்றப்பட உள்ளது. 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். இதற்கான கொப்பரை 5 அடி 9 அங்குலம் உயரமும், 225 கிலோ எடையில், செப்பு உள்ளிட்ட உலோகத்தில் செய்யப்பட்டுள்ளது. கொப்பரையில் சிவ சிவ என எழுதியும், அர்த்தநாரீஸ்வரர் ஓவியமும் வரையப்பட்டுள்ளது. தீபம் ஏற்ற 1,100 மீட்டர் காடா துணி மற்றும் 4,500 கிலோ நெய் பயன்படுத்தப்பட உள்ளன.
இந்நிலையில், மகா தீப கொப்பரை இன்று மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக திருக்கோயிலில் உள்ள கிளி கோபுரத்தின் அருகே உள்ள நந்தி சிலை முன்பு வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் கொப்பரை மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது பக்தர்கள் மற்றும் ஊழியர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா, அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தியுடன் தீப கொப்பரையை சுமந்து சென்றனர். மகா தீப தரிசனத்தை தொடர்ந்து 11 நாட்களுக்கு காணலாம்.
இதையும் வாசிக்கலாமே...