பக்தர்களின் கவனத்திற்கு... திருவண்ணாமலைக்கு இன்று முதல் 10 சிறப்பு ரயில்கள் இயக்கம்!


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து இன்றும் நாளையும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

சிறப்பு ரயில் சேவை

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப விழா கடந்த 17ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலில் பரணி தீபமும், அன்று மாலை 6 மணிக்கு மலை மீது மகாதீபமும் ஏற்றப்படுகிறது. தீபத்தை தரிசிக்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

சென்னை கடற்கரை

இந்தநிலையில் பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து இன்றும் நாளையும் (25 மற்றும் 26) மாலை 6 மணிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மேலும் தாம்பரத்திலிருந்து 26, 27ம் தேதிகளில் காலை 8:40 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்

வேலூர் கன்டோன்மென்ட்- திருவண்ணாமலை மெமு ரயில் (வண்டி எண்06127) இன்றும், நாளை (25, 26 ம் தேதிகள்) இயக்கப்படுகிறது. இன்று இரவு 9.50 மணிக்கு வேலூரில் இருந்து புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும்.

மறுமார்க்கத்தில் திருவண்ணாமலை- வேலூர் கன்டோன்மென்ட் ரயிலாக (வண்டி எண் 06128) நாளை (26ம்தேதி) மற்றும் 27ம்தேதி ஆகிய நாட்களில் இயங்கும். திருவண்ணாமலையில் அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் இந்த ரயில் அதிகாலை 5.35 மணிக்கு வேலூர் கன்டோன்மென்ட் வந்தடையும்.

இந்த ரயில், வண்டி எண் 06034 ஆக வேலூர் கன்டோன்மென்ட்- சென்னை கடற்கரை ரயில் நிலையம் வரை இயக்கப்படுவதால் தீப விழா காண வரும் சென்னை பக்தர்கள் திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு நேரடியாக அங்கேயே டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

விழுப்புரம்

விழுப்புரம்- திருவண்ணாமலை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண் 06129) நாளை (26ம்தேதி) மற்றும் 27ம்தேதி ஆகிய 2 நாட்கள் இயக்கப்படுகிறது.

காலை 9.15 மணிக்கு விழுப்புரம் சந்திப்பில் இருந்து புறப்படும் இந்த ரயில் காலை 11 மணிக்கு திருவண்ணாமலையை வந்தடைகிறது. இந்த ரயில் மதியம் 12.40 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு மதியம் 2.15 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைகிறது.

இதே ரயில் விழுப்புரம்-மயிலாடுதுறை சந்திப்பு ரயிலாக (வண்டி எண் 06690) இயக்கப்படுவதால் மயிலாடுதுறையிலேயே திருவண்ணாமலைக்கு நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

திருவண்ணாமலை

விழுப்புரத்தில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில் இரவு 10.45 மணிக்கு திருவண்ணாமலை வந்தடைகிறது. இதே ரயில் வண்டி எண் 06027 ஆக தாம்பரம்-விழுப்புரம் என இயக்கப்படுவதால் தாம்பரத்தில் இருந்தே திருவண்ணாமலைக்கு நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06032 ஆக திருவண்ணாமலை- விழுப்புரம் வரை இயக்கப்படும் இந்த ரயில் நாளை 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. அதிகாலை 3.30 மணிக்கு திருவண்ணாமலையில் இருந்து புறப்படும் இந்த ரயில் அதிகாலை 5 மணியளவில் விழுப்புரத்தை அடையும். இதே ரயில் 06028 ஆக விழுப்புரம்-தாம்பரம் என்று இயக்கப்படுவதால் திருவண்ணாமலையில் இருந்தே நேரடியாக தாம்பரத்துக்கு டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம் என தென்னக ரயில்வே விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x