ஆடி அமாவாசையன்று பித்ருக்களை எப்படி வழிபடுவது? இந்த தானம் செய்தால் சிறப்பு!


இந்த வருட ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்கள் வருகின்றன. இனி வரவிருக்கும் அமாவாசை திதி தான் ஆடி அமாவாசை பித்ரு பூஜைகளைச் செய்ய உகந்த தினம். பொதுவாக அமாவாசை தினத்தில் பித்ருக்களை வணங்கி, வழிபட்டு வந்தால் குடும்பம் தழைக்கும். பித்ருக்களின் சாபம் நீங்கும். அவர்கள் நம்மையும், நம் சந்ததியினரையும் ஆசிர்வதிப்பார்கள். தை, ஆடி, புரட்டாசி மாதங்களில் வருகின்ற அமாவாசை தினங்கள் கூடுதல் விசேஷமானவை. அதிலும் ஆடி அமாவாசை தினம் தர்ப்பணம் செய்வதற்கும், அமாவாசை வழிபாட்டிற்கும் உகந்த நாள்.

இந்த வருடம் ஆடி மாதத்தில் 2 அமாவாசை தினங்கள் வந்திருப்பது பலரையும் குழப்பமடைய செய்துள்ளது. இரண்டு தினங்களில், எப்போது பித்ரு பூஜைகளைச் செய்வது? எப்போது அமாவாசை விரதம் இருப்பது என்று பொதுமக்களிடையே சங்கடமான கேள்வியாக இருந்து வருகிறது.

நம் வாசகர்களின் தெளிவிற்காக ஸ்ரீ சுப்ரமணிய சாஸ்திரிகளிடம் இது குறித்து கேட்ட போது, “பூர்வம் த்யக்த்வா பரம் க்ராஹ்ய” என்பது வாக்கியம். இதன்படி, பூர்வம் என்ற முதலாவதை ”த்யக்த்வா” விட்டு, பரம் என்கிறதான பின்னால் வருவதை “க்ராஹ்ய” எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது தான் பொருள்.

’பொதுவாக இப்படி ஒரே மாதத்தில் இரு அமாவாசை தினங்கள் வருவதை மலமாதம் என்கிறோம். அப்படி ஒரே மாதத்தில் இரண்டு அமாவாசை தினங்களோ, பெளர்ணமி தினங்களோ வந்தால், முதலில் வருவதை விட்டு விட்டு, பின்னதையே சிறப்புடையதாக ஏற்க வேண்டும். இதை தான் நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன என்றார்.

ஆடி 31ம் தேதி வரும் அமாவாசை தினத்தை, ஆடி அமாவாசை தினமாக கொண்டு, கடல், ஆறு, குளக்கரைகள், நீர் நிலைகளில் தர்ப்பணம், தானம் முதலியன செய்து முன்னோரின் ஆசியைப் பெற்று வளமுடன் வாழ்வோம். உங்களால் முடிந்தால், அன்றைய தினம் பசுமாட்டிற்கு அகத்திக்கீரை வாங்கித் தாருங்கள். முதியோர், வயதானவர்கள், உடல் நலமில்லாதவர்களுக்கு உணவு வாங்கித் தாருங்கள்.

x