மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆவணித் திருவிழாவின் 4-ம் நாள்: தருமிக்கு பொற்கிழி அளித்த திருவிளையாடல்


மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவின் நான்காம் நாளான இன்று தருமிக்கு பொற்கிழி அளித்த திருவிளையாடல் அலங்காரத்தில் செய்யும் இடம் பெற்ற ஓலையுடன் பிரியாவிடை சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் அருள்பாலித்தனர்.

மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் ஆவணி மூலத்திருவிழாவின் நான்காம் நாளான இன்று தருமிக்கு பொற்கிழி அளித்த திருவிளையாடல் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

தங்கச் சப்பரத்தில் சுவாமியும், யானை வாகனத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளினர். ஐந்தாம் நாளான நாளை (செப்.09) உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல் நடைபெறும். முக்கிய விழாவான சுந்தரேசுவரருக்கு பட்டாபிஷேகம் செப்.11-ம் தேதி மாலை 6.30 மணியளவில் நடைபெறும்.

தருமிக்கு பொற்கிழி அளித்த திருவிளையாடல்: மதுரையை ஆண்ட மன்னன் வங்கிய சூடாமணி பாண்டியன், இறைவனுக்கு பூஜை செய்ய நறுமணமிக்க செண்பக மரங்களை தன் நந்தவனத்தில் வளர்ந்து வந்தான். இளவேனிற் காலத்தில் அரசியும் அருகிலிருக்க நந்தவனத்திலே உன்னத புதிய வாசனையை உணர்ந்தான். அவ்வாசனை தன் மனைவியின் கூந்தலில் இருந்து வருவதாக உணர்ந்தவன், பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உள்ளதோ என்று சந்தேகம் கொண்டான். தன் ஐயத்தை போக்குவோருக்கு ஆயிரம் செம்பொன் கொண்ட ஒரு பொற்கிழியை சங்க மண்டபத்திலே தொங்கவிட்டான். புலவர்கள் பலர் மனதில் தோன்றியதை பாடியும், மன்னனின் ஐயம் தீரவில்லை.

தருமி என்ற ஆதிசைவ பிரம்மச்சாரி, சொக்கநாதரை பூசிக்க விரும்பினான். மணமான பிறகே பூசிக்கலாம் என்பதால் தனக்கு அந்த பரிசை கிடைக்கும்படி செய்தால், அதன் மூலம் தானும் மணம்புரிந்து இறைபணி செய்யலாம் எனக் கருதி இறைவனிடம் வேண்டினான். இறைவனும், ‘‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி, காமம் செப்பாது கண்டது மொழிமோ, பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற், செறி எயிற்று அரிவை கூந்தலில், நறியவும் உளவோ நீ அறியும் பூவே’’ என்ற செய்யுள் எழுதப்பட்ட ஓலையை வழங்கினார்.

தருமியும் சங்கத்திற்கு சென்று அச்செய்யுளை படித்துக்காட்ட மன்னன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி, அப்பொற்கிழியை தருமிக்கு அளிக்க உத்தரவிட்டான். ஆனால் நக்கீரர் அதனைத் தடுத்தார். தருமி இறைவனிடம்‘ ஐயனே, உன் பாட்டில் குற்றம் கூறினால் யார் உன்னை மதிக்க வல்லவர்? என்று புலம்பி வருந்தினான். இறைவன் ஒரு புலவர் வடிவத்தில் சங்க மண்டபத்திற்கு வந்தார். தன் செய்யுளில் என்ன குற்றம்? என வினவ, நக்கீரரும் பொருட்குற்றம் உள்ளது என்றார். இருவருக்குமிடையே வாதம் தொடர, இறுதியில் இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து காட்டினார்.

இறைவனே வந்திருக்கிறார் என்று அறிந்த பின்னரும், நக்கீரர் பொருட்குற்றம் உள்ளது என வாதாட, இறைவன் தன் நெற்றிக்கண்ணைத் திறக்க, நெற்றிக் கண்ணின் வெப்பம் தாளாமல் பொற்றாமரைக் குளத்திலே நக்கீரர் விழுந்தார், இறைவனும் மறைந்தார். இவ்வாறு நக்கீரரின் தமிழ்ப் புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன், மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கிரங்கி, பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரனை உயிர்ப்பித்துக் கொடுத்தார். நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி செய்தார்.

x