சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில் மூன்று மூலஸ்தானங்கள் அடுத்தடுத்து கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.
கோயிலின் தென்பகுதியில் சங்கரலிங்கப் பெருமான் லிங்க வடிவில் கோயில் கொண்டுள்ளார். வட பகுதியில் கோமதி அம்பாள் கொலு வீற்றிருக்கிறார். இவ்விரண்டு சந்நிதிகளுக்கும் தனித்தனிக் கர்ப்பக்கிரகம், அர்த்தமண்டபம், அந்தராள மண்டபம், மணி மண்டபம், மஹா மண்டபம், பரிவார மண்டபம், சுற்று மண்டபங்கள் இருக்கின்றன. இவ்விரு சந்நிதிகளுக்கும் நடுவே சங்கரநாராயண சுவாமி வீற்றிருக்கிறார்.
தென் பகுதியில் உள்ள சங்கரலிங்கப் பெருமான் சந்நிதியில் கொடிமரம், பலிபீடம், மேல் விதானத்தில் உத்திராட்சத் தொட்டில் ஆகியவை உள்ளன. உத்திராட்ச தொட்டிலின் கீழ் நந்திபகவான் வீற்றிருக்கிறார். தொடர்ந்து அதிகார நந்தியும், அவரது தேவியான சுயஜாதேவி வீற்றிருக்கின்றனர். மூலஸ்தானத்தில் சங்கரலிங்கப் பெருமானுக்கு அருகிலேயே மனோன்மணி தேவி வீற்றிருக்கிறாள்.
மண்டபத்தில் தெற்கு நோக்கி நடராஜ மூர்த்தி ஊன நடனமும், ஞான நடனமும் காட்டியருள்கிறார். சுவாமிக்கு அருகே சிவகாமி அம்மையாரும், காலடியில் காரைக்கால் அம்மையாரும் உள்ளனர்.
கீழ்ப்பிரகாரம் வலது தூணில் இக்கோயிலைக் கட்டிய உக்கிர பாண்டிய அரசனும், இடதுபுறத் தூணில் உமாபதி சிவாச்சார்யாரும் நின்ற கோலத்தில் கூப்பிய கரங்களுடன் உள்ளனர்.
தெற்குப் பிரகாரத்தில் சைவ சமய குரவர்களான மாணிக்கவாசகர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழார் சுவாமிகள், மகா விஷ்ணு, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், காந்தாரி அம்மன், பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வராஹ சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். அடுத்து வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் எழுந்தருளி இருக்கிறார்.
வன்மீகநாதர்
வடக்குப் பிரகாரத்தில் தென்பக்கம் ஒரு புற்றில் வன்மீகநாதர் இருக்கிறார். இந்தப்புற்றில் இருந்துதான் இக்கோயிலின் முக்கிய பிரசாதமான புற்றுமண்ணை பக்தர்கள் எடுத்துச் செல்கின்றனர். அருகிலேயே சண்டிகேஸ்வரர் சந்நிதி உள்ளது. வடபக்கம் சனீஸ்வர பகவான், காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவி ஆகியோர் அடுத்தடுத்து வீற்றிருக்கின்றனர். கீழ்ப் பிரகாரத்தில் சந்திர சூரியர்கள் உள்ளனர்.
சிற்ப வேலைப்பாடுகள்
மகா மண்டபத்தைச் சுற்றி சிற்பச் செறிவு மிக்க சிலைகள் அமைந்துள்ளன. துவாரபாலகர், யோக நரசிம்மர், கார்த்த வீரியன், ராவணன், ஹிரண்ய சம்ஹார மூர்த்தி, கணபதி, வீணா காளி, பத்திரகாளி, மாறியாடும் பெருமாள், அகோர வீரபத்திரர், நடராஜர், ரிஷபாரூடர், உபதேச தட்சிணாமூர்த்தி, ருத்ர மூர்த்தி, ஐந்துமுகப் பிரம்மா, சிம்மவாகன கணபதி, ஸ்ரீராமர், மன்மதன், சுவாமி வெங்கடாசலபதி, சுவாமி சங்கரநாராயணர், சுவாமி சந்திரசேகரர், உக்கிரபாண்டிய அரசர், சிம்ஹாசனேஸ்வரி, மஹாவிஷ்ணு, பாலசுப்பிரமணியர், துர்காதேவி, மகிஷாசுரமர்த்தினி, கபாலீஸ்வரர், கால பைரவர், ஊர்த்துவ தாண்டவர், தில்லைக்காளி, கஜசம்ஹார மூர்த்தி, தட்ச சம்ஹார மூர்த்தி, உச்சிஷ்ட கணபதி, வீரபத்திரர், பைரவர், திரிவிக்கிரமர் உள்ளிட்ட சிற்பங்கள் மிகவும் தத்ரூபமாக அமைந்துள்ளன.
ஆடித்தபசு தரிசனம் - 3...