பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்.

திருப்பத்தூர்: பிள்ளையார்பட்டியில் கஜமுக சூரசம்ஹாரத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சதுர்த்தி விழா ஆக.29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் கேடகத்திலும், மாலையில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.

நேற்று கஜமுக சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதையொட்டி மாலையில் திருநாள் மண்டபத்தில் வெள்ளி யானை வாகனத்தில் வாள், வில், அம்பு போன்ற ஆயுதங்களுடன் விநாயகர் எழுந்தருளினார். அவருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து யானை தந்தத்துடன் எழுந்தருளிய விநாயகர் மேளதாளத்துடன் கிழக்கு கோபுரம் வழியாக தெப்பக்குளம் வந்தார். அங்கு யானை முகத்துடன் காணப்பட்ட சூரனை தந்தத்தால் விநாயகர் வதம் செய்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரத்தில் தந்தத்தால் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி.

செப்.6-ம் தேதி தேரோட்டம் நடைபெறும். மேலும் அன்றைய தினம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நடைபெறும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் காட்சியளிப்பார். செப்.7-ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து தீர்தவாரி உற்சவம், பிற்பகல் 2 மணிக்கு முக்குரணி மோதகம் படையலும் நடைபெறும். இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடுடன் விழா நிறைவு பெறும்.

x